நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் இன்னும் தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அமைச்சரவையில் முதற்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நடத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவு குறித்து பல்வேறு தரப்பினராலும் வௌிப்படுத்தப்பட்டுள்ள மாறுபட்ட கருத்துக்களும் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நீதித்துறை அதிகாரிகளை அதிகளவில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் இல்லாததால் இன்னமும் வெற்றிடங்கள் நிலவுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, 50 நீதவான்களை இணைத்துக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 33 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
