ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைக் கையாளும் பொறுப்பினை இந்தியாவிடம் அமெரிக்கா கையெளித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
சூரியன் எஃப்.எம் வானொலியில் சனிக்கிழமை ஒலிபரப்பான அரசியல் நிகழ்ச்சியொன்றில், ஒருவேளை அமெரிக்கா தம்மிடம் ஒன்றும் சுமந்திரனிடம் வேறொன்றும் சொல்கிறதோ தெரியவில்லை? என்றும் ஐயம் எழுப்பினார்.
அமெரிக்கத் தூதரகம் தம்மை அழைத்துக் கலந்துரையாடியதாகவும், இதன்போது ஈழத் தமிழர் அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்கா எந்தவிதமான நிலைப்பாட்டுடனும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் மனோ கூறினார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்காவுக்கு வருமாறு அங்கிருந்து அழைப்பு வரவில்லை என்றும், ஆனால் ராஜதந்திர ரீதியாக யார் அங்கு சென்றாலும் அவர்களுக்கான அதிகாரப்பூர்வ கௌரவம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்தாக மனோ குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா எந்த நிலைப்பாட்டை எடுக்கிறதோ? அதே நிலைப்பாட்டையே அமெரிக்காவும் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
