நாட்டில் டெங்கு நோய்த்தாக்கத்தின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், இந்த மாதத்தின் கடந்த மூன்று நாட்களுக்குள் மாத்திரம் 3,422 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 58,810 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுடன், இதுவரை 39 மரணங்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என சுட்டிக்காட்டியுள்ள அவர், மரணித்த 39 பேரில் 10 பேர் மாத்திரமே ஆண்கள் எனவும் தெரிவித்தார்.
இந்தத் தீவிர டெங்கு பரவல் நிலைமை எதிர்வரும் நாட்களிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக பதில் பணிப்பாளர் மேலும் எச்சரித்துள்ளார்.
