ஆழ்துளை கிணற்றில் விழுந்த ரயானுக்காக உலகளவில் பிரார்த்தனை

4 years ago
News in Brief
(105 views)
aivarree.com

ரயான் என்ற 5 வயது சிறுவனால் மொரோக்கோ நாட்டில் சோகம் சூழ்ந்து கொண்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ரயான் மூச்சுத்திணறும் காட்சிகள் உலகளவில் கவனத்தை திருப்பியுள்ளது.

வடக்கு மொரோக்கோவில் உள்ள இக்ரான் கிராமத்தில் 100 அடி ஆழமான கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கிணற்றில் தவறி விழுந்த ரயான் 32 அடி ஆழத்தில் குறுகலான பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார்.

மொரோக்கோ அரசாங்கம் அண்டை நாடுகளின் உதவியுடன் குறித்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

24 மணித்தியாலமும் பணியாளர்கள் ரயானை மீட்பதற்காக போராடி வருகின்றனர்.
இதேவேளை சிறுவன் இருக்கும் இடம் கமரா பொறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறுவன் மிகக் குறுகிய பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் மீட்புப் பணியாளர்களால் அவரை அடைய முடியவில்லை என கூறப்படுகிறது.

சிறுவன் சிக்கிக் கொண்டுள்ள இடத்தின் ஆழம் மற்றும் விட்டத்தின் அளவு என்பன சிறுவனை மீட்பதில் பாரிய தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றுமொரு சிறுவனை கிணற்றுக்குள் அனுப்பி ரயானை நேரடியாக காப்பாற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டது. எனினும் நபரொருவரை அனுப்ப முடியாத அளவுக்கு கிணறு குறுகலாக இருப்பதனால் அந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.

கிணற்றை அகலப்படுத்தும் போது இடிந்து விழ கூடிய சாத்தியம் இருப்பதால் அது தொடர்பாகவும் தீர்மானம் ஒன்றுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவனை மீட்கும் வகையில் நிலப்பகுதியை தோண்டும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

பணியாளர்கள் கமரா உதவியுடன் ரயானுக்கு தண்ணீர் மற்றும் ஒக்ஸிஜனை வழங்கி வருவதோடு வைத்தியர்கள் அவனது உடல்நிலையை தொடந்தும் கண்காணித்து வருகின்றனர்.

ரயானுக்காக உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Reported by
Editorial Reporter