கல்முனையில் கடந்த 17ம் திகதி இரவு புலனாய்வு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு வெள்ளை வானில் வந்த சிலரால், நிதன்சன் என்ற தமிழரசு கட்சி இளைஞர் அணி உறுப்பினர் கடத்தப்படவிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான டுவிட்டர் பதிவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வெளியிட்டிருந்தார்.
எனினும் அவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை என்றும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படவிருப்பதாக காவல்துறை தலைமையகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பாராளுமன்றில் பிரஸ்தாபிக்கவிருப்பதாக, இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நெருக்குவாரங்கள் அரசாங்கத்தைச் சூழ்ந்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
