இலங்கைக்கான தனது இராஜதந்திர சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்து விரைவில் நாடு திரும்பவுள்ள கொரியத் தூதுவர் மியோன் லீ,இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவு குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய வேலைத்திட்டங்களுக்காகத் தான் வழங்கிய பங்களிப்புகள் குறித்தும் கொரியத் தூதுவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.
இதேவேளை, புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டங்களுக்கும், இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்திப் பணிகளுக்கும் கொரிய அரசாங்கம் வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்புகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தூதுவரிடம் தெரிவித்தார்.
