சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள 109 மாடிகளைக் கொண்ட ‘CITIC’ கோபுரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும், விபத்துக்கான காரணம் குறித்த விபரங்களை சீன அரசு மூடிமறைத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் விமானி மாத்திரம் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து சீன அரச ஊடகம் 60 சொற்களைக் கொண்ட மிகச் சிறிய அறிக்கையை மாத்திரமே வெளியிட்டுள்ளது.
அத்துடன், விபத்து தொடர்பான காணொளிகள் அனைத்தும் சீன இணையப் பக்கங்களிலிருந்து அதிகாரிகளால் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பீஜிங்கில் இலகு ரக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் கடுமையான வான்வெளிப் பாதுகாப்பு நிலவும் பீஜிங் நகருக்குள் இந்த விமானம் எவ்வாறு நுழைந்தது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விபத்துடன் தொடர்பில்லாத, அதிஷ்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் இக்கட்டடத்தின் சாதாரண புகைப்படங்களைக்கூட சமூக வலைத்தளங்களிலிருந்து அதிகாரிகள் நீக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
