tamilnewsline

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழியும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக உயர்த்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை அடையும் நாள் அல்லது பிரதம நீதியரசர் பதவியை ஏற்ற நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நாள் ஆகிய இரண்டில் எது முன்னதாக வருகிறதோ, அந்த நாளில் ஓய்வுபெற வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக உயர்த்தவும் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தங்கள் நீதித்துறை நிர்வாகத்தின் செயல்திறன் மற்றும் திறன்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version